ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும்.
ஒன்று, தன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்கு. அதையே நான் தன்னறம் என்கிறேன். நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல், அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றன. ஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும்.
இரண்டு, நம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள். ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டு. அவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது.
எவரும் எந்த உறவிலும், அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாது. எவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது. அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை. அது ஆன்மாவை அழிக்கும் செயல். எவரும் தன் அறிவார்ந்த மலர்ச்சி, ஆன்மிக முன்னகர்வு ஆகியவற்றை எந்நிலையிலும் விட்டுவிடக்கூடாது. பெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ, கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ.
ஆனால் அடிப்படைக் கடமைகளைச் செய்தாகவேண்டும். அதாவது, அடிப்படையானவற்றை மட்டும். அவற்றைச் செய்வது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. கடமை என்பது தார்மீகப் பொறுப்பு. எந்த பொறுப்பும் சுமை. எந்தச் சுமையும் வாழ்க்கை முழுமைக்குமானது அல்ல. எந்த பொறுப்பும் அதில் இருந்து எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வெளியேறும்பொருட்டே செய்யப்படவேண்டும்.
ஆக, மேலே சொன்ன இரண்டு அம்சங்களின் சமரசமாகவே நம் முடிவுகள் அமையவேண்டும். ஒன்று நம் தன்னறம், இன்னொன்று, நம் சூழல். அப்படித்தான் நீங்கள் உங்கள் மணம் பற்றிய முடிவை நீங்கள் எடுக்கவேண்டும்.
- சாதிமறுப்புக்காக ஒரு திருமணம்! - https://www.jeyamohan.in/222560/ - லிருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக